Tuesday, April 26, 2022

மர்ஹூம் வை.எம்.ஹனிபாவின் பெயரை வீதிக்கு சூட்டத் தீர்மானம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் பெயரை சாய்ந்தமருதிலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 49ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) மாலை, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக் அவர்கள் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, சாய்ந்தமருது-16 ஆம் பிரிவில் அமைந்துள்ள வீ.எச்.வீதியில் தொடங்கி தாமரை வீதி வரை செல்லும் பாதைக்கு வை.எம்.ஹனிபா வீதி என்று பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த இவ்வீதிக்கு இதுவரை எவ்வித பெயரும் இல்லாதிருப்பதாகவும் இவ்வீதியிலேயே மர்ஹூம் வை.எம்.ஹனிபா அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக், இப்பகுதி வாழ் மக்கள் இவ்வீதிக்கு அன்னாரது பெயரை சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர் எனவும் இதனை எமது மாநகர சபை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து இப்பெயர் சூட்டும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சாய்ந்தமருது-15 மற்றும் 17ஆம் பிரிவுகளில் அமைந்துள்ள சனசமூக நிலைய வீதி எனவும் சிலோன் வீதி எனவும் இரு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்ற பாதைக்கு ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பிரேரணையையும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக் கொண்டு வந்திருந்தார்.




















Friday, April 15, 2022

பாராளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்காது மாற்றம் சாத்தியமில்லை..! - கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் தெரிவிப்பு.


(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற நிலைமைகளுக்கு முற்புள்ளி வைக்கப்பட வேண்டுமாயின் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிகளாலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

நாட்டின் சமகால நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசியல் ஸ்ரமற்ற நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. பொதுமக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் வெடித்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி ஒட்டுமொத்த ஆட்சியாளர்களையும் வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் மௌனம் காத்து வருகின்றார்கள். 

எனினும், ஆட்சியாளர்கள் தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, இந்த ஆண்டு செலுத்த வேண்டிய வெளிநாட்டுக்கடன்களை மீளச் செலுத்த முடியாது என்று எடுத்த எடுப்பில் அறிவித்து விட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தை மட்டுமே தமது தீர்வாக கொண்டிருக்கின்றார்கள்.

இவ்விதமான செயற்பாடுகளும், தீர்மானங்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடிளுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்கும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம், ஆட்சியாளர்கள் ஜனநாயக போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதே பொருத்தமான செயற்பாடாக இருக்கும் என்பதோடு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படுத்துவதாக அமையும்.

ஆனால் ஆட்சியாளர்களோ ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை தமது குடும்பத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு வெறுமனே அமைச்சரவை மாற்றியமைத்தல் அல்லது எதிரணியையும் அமைச்சரவைக்குள் உள்வாங்கிச் செயற்படுதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இது பொருத்தமற்ற அணுகுமுறையாகும். தலைவலிக்கு தலையணையை மாற்றும் செயற்படாகவே இருக்கின்றது. ஆகவே தற்போதைய ஆட்சியாளர்கள் நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்பட முயற்சிப்பார்களாயின், உடனடியாக மக்கள் மன்றமான பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அதாவது, அமுலில் உள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கி, மீண்டும் குறைகள் நீக்கப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்க வேண்டும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட மக்களாட்சி பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதற்கு வழிகோலப்படும்.

இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்து தேசிய அரசியல் தரப்பினரும் பேதமின்றி முன்வர வேண்டும். அனைத்து அரசியல் தரப்பினரும், மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு விரும்புவார்களானால் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதே ஒரே தெரிவாகும்.

அவ்வாறு அதிகாரங்களை மாற்றியமைக்காது, அமைச்சரவையை மறுசீரமைப்பதாலோ, அல்லது அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் இடைக்கால அரசாங்கத்தினை நிறுவுவதாலேயோ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படப்போவதில்லை.

அவ்விதமான செயற்பாடு நிலைமைகளை மேலும் சிக்கலான சூழலுக்குக் கொண்டு செல்வதுடன் நாட்டினதும், அடுத்த சந்ததியினரதும் எதிர்காலம் சூன்யமாகிவிடும் பேராபத்துள்ளது- என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் மேலும் தெரிவித்துள்ளார்.

metromirrorweb@gmail.com

அனுபவித்து சென்றவர்கள் மீண்டும் வருவதை அலட்டிக் கொள்ளவில்லை..! -மு.கா பிரதிப் பொருளாளர் யஹியாகான்-

கட்சியில் நன்கு அனுபவித்து விட்டு- வேறு கட்சி தாவி மீண்டும் வந்தவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது அல்-ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்:-

கட்சி மாறுவதை தொழிலாகக் கொண்டவர்கள், அவ்வாறு கட்சி தாவி நன்கு அனுபவித்து விட்டு, துரோகம் இழைத்து விட்டு மீண்டும் எம் பக்கம் வருவோர் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வாறானோர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை.

ஊர் ஒரு பக்கமும் நாங்கள் ஒரு பக்கமும் நின்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில்- ஓடி ஒழித்தவர்கள் இன்று மு.கா.வுக்குள் வந்து சேர்கின்றார்கள். மு.காவின் கதவு என்றுமே திறந்துள்ளது. எவரும் வரலாம். ஆனால் அவர்கள் குறித்து தலைமைக்கும் கட்சிக்கும் தெளிவான பார்வை உள்ளது.

மு.காவில் நீண்ட காலமாக இருக்கின்றேன். தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்றேன். நான் பிறந்த மண்ணோடு தொடர்போடு இருக்கின்றேன். தேர்தல் சீசனுக்காக ஊருக்கு வருபவன் நான் அல்ல என்பதை மக்கள் அறிவர்.

எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் முதல் வருகின்ற தேர்தலில் உரிய அந்தஸ்தை தலைமையும் கட்சியும் எமக்கு வழங்கும் என்பதில் பூரண நம்பிக்கை இருக்கிறது.

அதை விடுத்து சிலரின் கிசு கிசு பேச்சுக்களை நாம் நம்பத் தேவையில்லை. உரிய கௌரவமான இடத்தில் தலைவரால் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.