Monday, December 26, 2022

அரச சுவதம் விருது பெற்றார் இப்றாஹிம் ஜாபிர்..!

சாய்ந்தமருது நிருபர்

சாய்ந்தமருதை சேர்ந்த அறிவிப்பாளரும் நாடக நடிகருமான இப்றாஹிம் ஜாபிர், அரச சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைசேனை மத்திய கல்லூரி மண்டபத்தில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம்.றின்சான் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விருது விழாவின்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்கா ஆகியோரின் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸ்வரன் அவர்களிடமிருந்து இவர் இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினரான இப்றாஹிம் ஜாபிர், கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 20, 2022

கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் நூர்ஜஹான் பீவி..!


சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருடங்களாக ஆரம்பக் கல்வி ஆசிரியராகக் கடமையாற்றி வந்த திருமதி நூர்ஜஹான் பீவி அலி அக்பர் அவர்கள் தனது 56ஆவது வயதில் 2022.12.15ஆம் திகதி முதல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

1992ஆம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்று சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் தனது கல்விப் பணியினை ஆரம்பித்த இவர் 30 வருட காலம் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியப் பணியாற்றியுள்ளார்.

இவர் கரவாகு தெற்கு கிராம சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஐ.அலியார் தம்பதியரின் கடைசிப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு..!

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இக்கலாசார மத்திய நிலைய கட்டிடத் தொகுதி விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் முன்னிலையில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் மேற்படி மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான யூ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இம்முகாமைத்துவ சபையின் அங்குரார்ப்பண நிகழ்வின்போதே அவர் இப்பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்ற அஸ்வான் மௌலானா, நாடகக் கலை பட்டறைக்கான வளவாளராகவும் அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாடக எழுத்தாக்கம், தயாரிப்பு மற்றும் மேடை நாடகம் என்பவற்றில் விற்பன்னராகத் திகழும் இவர் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதுடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

கலை, கலாசார மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளில் முன்னின்று பங்காற்றி வருகின்ற இவர் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 15, 2022

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றி..!


(சாய்ந்தமருது நிருபர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது.

இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 35 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

பட்ஜெட்டை சமர்ப்பித்து மாநகர முதல்வர் உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துகளையடுத்து பட்ஜெட் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 09 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 06 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர், தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 04 உறுப்பினர்கள், , ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழுவின் ஒரு உறுப்பினருமாக 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 02 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





Sunday, December 11, 2022

ACMC சர்வதேச விவகார பணிப்பாளராக மாஹிர் நியமனம்...!


-செயிட் ஆஷிப்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் - சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த மாஹிர் - சர்வதேச விவகாரங்களில் நீண்ட அனுபவமிக்கவர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் பிரிவின் கீழ் மனித உரிமை ஆராய்ச்சியாளராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவிக்காக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பரிட்சையில் ஐந்து பேர் சித்தியடைந்திருந்தனர். இந்த ஐவரில் மாஹிரும் ஒருவர்.

இதன் பின்னர் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

இவர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அனுபவத்தை கொண்ட மாஹிருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை, இந்த பொறுப்பை வழங்கியுள்ளமை பொருத்தமானதே என்று கட்சியின் அபிமானிகள் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.

Monday, December 5, 2022

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை அனுமதிக்க விண்ணப்பம் கோரல்..!

(எம்.எம்.அஸ்லம்)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள தகுதியான மாணவிகள், சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அனுமதி வழங்குவதற்குரிய மாணவிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.   

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி (எம்.ஏ.) அவர்களை முதல்வராகக் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். 

இதுவரை 30 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சிலர் பல்கலை பட்டம் பெற்று வெளியேறியுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.