Thursday, May 30, 2024

கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தவர் அன்ஸார் மெளலவி; அம்பாறை மாவட்ட உலமா சபை அனுதாபம்.!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை மாவட்டத்தில் அஹதியாப் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் கல்வி, கலாசார, ஆன்மீக, சமூக மேம்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரான ஏ.எல். அன்ஸார் மெளலவியின் திடீர் மறைவு இப்பிராந்தியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட உலமா சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட அஹதியாப் பாடசாலைகள் சம்மேளனத்தின் முக்கியஸ்தரும் சாய்ந்தமருது உலமா சபையின் உப தலைவருமான ஏ.எல். அன்ஸார் மெளலவி இன்று வியாழக்கிழமை (30) காலமானார். அன்னாரது ஜனாஸா இன்று இரவு பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அம்பாறை மாவட்ட உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஷிம் மெளலவி, செயலாளர் ஏ.எல்.நாசிர் கனி மெளலவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

சாய்ந்தமருது பிரதேசத்தின் மூத்த உலமாவான அன்ஸார் மெளலவி, இஸ்லாமிய சன்மார்க்கத்தைப் போதிப்பதிலும் மக்களை நெறிப்படுத்துவதிலும் மிகக் கரிசனையுடன் செயற்பட்டு வந்துள்ளார். குறிப்பாக தான் ஒரு பாடசாலை ஆசிரியர் என்ற ரீதியில் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிப்பதில் ஒரு முன்மாதிரியான நல்லாசானாகத் திகழ்ந்திருக்கிறார்.

மார்க்கக் கல்வியின் ஊடாக அறநெறிகளைப் போதித்து மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான அஹதியாப் பாடசாலைகளை இப்பிராந்தியத்தில் அறிமுகப்படுத்துவதிலும் அவற்றை முன்னேற்றுவதிலும் அவர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் ஆளுநர் சபையில் நீண்ட காலமாக அங்கம் வகித்து அக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக சாய்ந்தமருது பத்தாஹ் பள்ளிவாசலில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இமாமாகப் பணியாற்றியுள்ள அன்ஸார் மெளலவி அப்பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கான கட்டுமாணத்திலும் முன்னின்று உழைத்துள்ளார்.

இவ்வாறு கல்வி, கலாசார, ஆன்மீக, சமூக முன்னேற்ற விடயங்களில் தியாக சிந்தனையுடன் மிகவும் துடிப்புடன் செயலாற்றி வந்த நிலையில் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வுபெற முன்னரே அவர் இறையடி சேர்ந்திருப்பதானது எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்- என்று அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Thursday, May 16, 2024

முஷாரப் எம்.பி.யின் நிதியில் மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலைக்கு புதிய கட்டிடம்.!

-ஏயெஸ் மெளலானா-

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காரைதீவு உப பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மனாப் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது பள்ளிவாசல் பேஷ் இமாம் எம். பாரிஸ் மெளலவி விசேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார்.

மாவடிப்பள்ளி அந்நூர் பாலர் பாடசாலைக்கென கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி அதன் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் இணைப்பாளர் அஸாம் அப்துல் அஸீஸ் மெளலவி மேற்கொண்ட முயற்சியின் பயனாக அவர் இக்கட்டிட நிர்மாணத்திற்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து 10 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 7, 2024

மாவடிப்பள்ளி அரபுக் கல்லுரிக்கு முஷாரப் எம்.பி. நிதி ஒதுக்கீடு..!

-ஏயெஸ் மெளலானா-

மாவடிப்பள்ளி மர்க்கஸ் சாஆத் இஸ்லாமிய்யா அரபுக் கல்லுரியின் அபிவிருத்திக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் 07 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த அரபுக் கலாசாலையை  மேம்படுத்தும் பொருட்டு கல்லூரியின் அதிபர் மற்றும்  நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து இத்தொகையை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எம். அஸாம் மெளலவி தெரிவித்தார்.

இந்த நிதியின் ஊடாக தற்போது கல்லூரி மண்டபத்திற்கு மின்விசிறிகள் பொருத்தும் வேலைத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.