Saturday, July 24, 2021

கல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரும் பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை இப்பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கல்முனை மாநகர சபை மற்றும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனை, வழிகாட்டலில் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன் ஹாஜியார், செயலாளர் ஏ.எல்.கபீர், பொருளாளர் யூசுப் ஹாஜியார் ஆகியோர் இச்சந்தையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார செயற்பாடுகளை நெறிப்படுத்தி வருகின்றனர்.

பொதுச் சந்தையின் பிரதான நுழைவாயிலில் சுகாதார அறிவுறுத்தல்கள் பொறிக்கப்பட்ட பாரிய பதாகை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அங்கு பல இடங்களிலும் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை முகக்கவசம் அணிந்து வரத் தவறுகின்ற பொது மக்களுக்கு அவற்றை வர்த்தகர் சங்கத்தினர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும், சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதிலும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் அவர்களை வழிப்படுத்துவதிலும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.



No comments:

Post a Comment