Monday, February 28, 2022

பொத்துவில், திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் கையளிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (28) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி..ஆர்.ரஜாப் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் ஆகியோரிடம் குறித்த அம்பியூலன்ஸ்களின் திறப்பு மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கும் அம்பியூலன்ஸ் தேவையாக இருக்கின்ற போதிலும், சுமார் 04 வருடங்களுக்குப் பின்னர் சுகாதார அமைச்சினால் எமது பிராந்தியத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் அவசர, அவசியத் தேவை, நீண்ட தூர சேவை என்பவற்றை முன்னுரிமையாகக் கொண்டே இவ்விரு வைத்தியசாலைகளும் தெரிவு செய்யப்பட்டு, வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேலும் இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் வாகனப் பிரிவு உறுதியளித்திருப்பதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் இன்னும் இரண்டு வைத்தியசாலைகளுக்கு அவற்றை வழங்கி வைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.





No comments:

Post a Comment