Monday, September 19, 2022

கல்முனையில் மின்சார மோசடியில் ஈடுபட்ட பள்ளிவாசல் நிர்வாகி உள்ளிட்ட மூவர் கைது; கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வுக் குழு அதிரடி..!

(பாறுக் ஷிஹான்)

கல்முனைப் பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள மின்மானிகளில் மாற்றம் செய்து மின்சார மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட இம்மூவரும் தமது வீடுகளிலுள்ள மின்சார இணைப்புக்கான மின்மானியில் நுட்பமாக மாற்றம் செய்து, நீண்ட காலமாக சட்டவிரோத மின்சாரத்தை பெற்று வந்தமை தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து வந்த மின்சார சபை விசேட புலனாய்வு உத்தியோகத்தர்களின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்போதே இவர்களது சட்டவிரோத செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் அனுசரணையுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்முனைப் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment