Saturday, May 20, 2023

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி; குவைத் தூதரகம் உறுதி..!


-ஏயெஸ் மெளலானா-

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறைத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய கட்டிடத் தொகுதி ஒன்றை விரைவாக அமைத்துக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது.

ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான குவைத் தூதுவரின் பிரதிநிதியாக இன்று சனிக்கிழமை (20) இப்பாடசாலைக்கு விஜயம் செய்த குவைத் தூதரகத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மட் பிர்தெளஸ், இதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் குவைத் தூதரக செயலாளர் வரவேற்கப்பட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் அக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து பாடசாலை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்ட தூதரக செயலாளர்
அங்கு நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிந்தார்.

இதன்போது கட்டிட வசதி குறைபாடு காரணமாக சில வகுப்பறைகள் தகரக் கொட்டில்களில் இயங்கி வருவதனால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டிய அவர், முன்னுரிமை அடிப்படையில் வகுப்பறைக் கட்டிடமொன்றை அமைத்துத் தருவதற்கு குவைத் தூதுவரின் அனுசரணையுடன் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக தூதரக செயலாளர் முஹம்மட் பிர்தெளஸ் மற்றும் ஏற்பாட்டாளரான முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் அதிபர் அலி அக்பர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.








No comments:

Post a Comment