Thursday, August 3, 2023

அமைச்சர் நசீர் அஹமதிடம் 250 மில்லியன் நஷ்டஈடு கோரி ஆளுநர் செந்தில் வக்கீல் நோட்டீஸ்..!


-அலுவலக செய்தியாளர்-

சுற்றாடல்துறை  அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 250 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான  தகவல்களையும் வெளியிட்டு அவற்​றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு நட்டஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நோட்டிஸ் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் குறித்த நட்டஈட்டுத் தொகையை கிழக்கு மாகாண பாடசாலை வளர்ச்சிக்கு வழங்குமாறும் இல்லையேல் நசீர் அஹமட் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளராக தற்காலிக நியமனம் பெற்றிருந்த அதிபர் சேவை தரத்தில் இருந்த ஒருவர் அப்பதவிக்கு தகுதியான கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியில் தூக்கிப் பிடித்த அமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து இந்த இடமாற்றத்தை செய்ததாக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அது மாத்திரமன்றி கிழக்கு மாகாண கல்வி செயலாளரை ஒரே இரவில் பதவியில் இருந்து தூக்குவதாகவும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதனால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதும் உள்ள அரச ஊழியர்களின் எதிர்ப்பிற்கு நசீர் அஹமட் உள்ளானார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட நசீர் அஹமட்டின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர் என்றும் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment