Thursday, January 27, 2022

சாய்ந்தமருதில் முதுமைப் பெண் கொலை; பணம், தங்க ஆபரணங்களும் கொள்ளை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன், பாறூக் ஷிஹான்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் முதுமைப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் வசமிருந்த தங்க ஆபரணங்களும் பணமும் கொள்ளையிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இப்பெண்ணின் சடலம் இன்று வியாழன் (27) காலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவில் புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே 81 வயதுடைய சுலைமான் செய்யது முஹாரி எனும் இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடுவதற்கு முற்பட்ட கொள்ளையர்களினால் இவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் எனவும் இவரது தலையிலும் கழுத்துப் பகுதியிலும் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் பாரமான கம்பி ஒன்றும் மீட்கப்பட்டிருக்கிறது.

10 ஆண் பிள்ளைகளின் தாயாரான இப்பெண்ணின் கணவரும் 03 பிள்ளைகளும் சில வருடங்களுக்கு முன்னர் மரணனமடைந்துள்ளனர். தனது பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இவர் தனது வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு தனிமையில் தூங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கொள்ளையர்கள் வீடு புகுந்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment