(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மலையக மாணவர்கள் மலையக சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதிவண/ பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ (J.P. Whole lsland) தெரிவித்துள்ளார்
மலையக மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி மாணவர்களின் பயன்பாட்டுக்காக போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்குகின்ற மாபெரும் வைபவம் ஹட்டன் ம.மா/ஹ/ குயில்வத்தை தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் (27) மாலை இடம்பெற்றவேளை அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்லூரி அதிபர் எம். வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் இந்த இடத்தில் பேசுவதற்குக் காரணம் உங்களைப் போன்று சிறந்த முறையில் கல்வி கற்றதனால்தான். ஆகவே, பலர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளைச் செய்து வருகின்றோம். அதனைப் பெற்று நீங்களும் இந்த சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களாக வாழவேண்டும்.
இன்று கடுமையான பாதைகளைக் கடந்து வந்தவர்கள் தான் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் கலைப்பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர். அதனையிட்டு நாங்கள் சந்தோசமடையும் அதேவேளை, எதிர்காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் பொருளாதாரத் துறைகளில் நாம் விருத்தி காணவேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் ஊடாக தான் வர்த்தகத் துறையில் தேடி நுழைய வேண்டும். அப்போதுதான் தம்மை தாம் உயர்த்திக் கொள்ள முடியும். ஹட்டன் பகுதியில் பல பிரபல பாடசாலைகள் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற துறைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைத்த போதிலும் முழு மலையகத்தைப் பொறுத்தமட்டில் அது போதுமானதாக இல்லை.
ஆகவே, நீங்கள் தங்களுக்கு செய்யும் உதவி, சிறந்த முறையில் கல்வியைப் பெற்று இந்த சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.வி.ஜீ மாணியங்கம, வேர்ல்ட் விஷன் ஸ்ரீலங்காவின் நுவரெலியா மாவட்ட செயற்றிட்ட முகாமையாளர் மனோஜ் ஜூட் தவராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான டீ. ஜஸ்டீன் செல்வகுமார், என்.முருகானந்தன் மற்றும் மத விவகாரங்களுக்கான செயலாளரின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் (FFSL.REFEREE) ஏ.டீ. முரளி, நோர்வூட் பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிசாரியேஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment