Thursday, January 12, 2023

கட்சி மீதான பற்றுறுதியும் தலைமைத்துவ விசுவாசமும் மாவட்ட செயலாளர் வரை உயர்த்தியுள்ளது; சமால்தீனுக்கு மு.கா. தவிசாளர் அப்துல் மஜீட் வாழ்த்து..!

(கல்முனை செய்தியாளர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்ட கால போராளியும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன் அவர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டதையிட்டு தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் உரித்தாக்குகிறேன் என்று அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

2023ம் ஆண்டுக்கான கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செவ்வாயன்று (10.01.2023) மருதமுனையில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தேசிய தலைவராகவும் மாவட்ட செயற்குழுவின் தலைவருமாக விளங்குகின்ற ரவூப் ஹக்கீம் அவர்களினால் கட்சியின் மாவட்ட செயலாளர் நியமனம் அறிவிக்கப்பட்டது.

தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட எனது அன்புக்குரிய சமால்தீன் அவர்கள் இன்று வரை கட்சியின் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வரும் ஒருவராவார்.

2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் கட்சியை சிலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றபோது, கட்சி நெருக்கடி நிலையை சந்தித்தது, அவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அரசியல் அபிலாசைகளுக்கும் அப்பால் தலைமைத்துவத்தின் மீது கொண்ட அதீத விசுவாசமும் கட்சி மீது கொண்ட பற்றுறுதியும் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இன்னும் இன்னும் கட்சிப் பதவிகளில் அவர் உயர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆசீர்வாதம் எப்போதும் என் இதயத்தில் உண்டு- என்று தவிசாளர் அப்துல் மஜீட் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment