Monday, January 9, 2023

கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமா சபைக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்; அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அறிக்கை..!


-எம்.எம்.அஸ்லம்-

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தபோது 2002ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அவர் தலைமையில் அரசு- புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில், முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட மாட்டாது என்று கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா (MA), மௌலவி ஏ.எல்.நாசிர் கனி (MA) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்த 11.10.2002ஆம் திகதியன்று கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமாப் பிரதிநிதிகள் அதன் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா அவர்கள் தலைமையில் பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேசியபோது, இனப்பிரச்சினைக்கு
தீர்வு காணப்படும்போது முஸ்லிம்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென உறுதியளித்திருந்த அதேவேளை, அரசியல தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் தீர்வுத் திட்டங்களின் ஆவணத்தில் முஸ்லிம்களுக்குரிய தீர்வுத் திட்டமும்
உள்ளடக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை உரிய நேரத்தில் அவர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில், இம்மாகாணம் வேறு எந்த மாகாணத்தோடும் இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற விடயத்தை ஜனாதிபதிக்கு
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்றுக் கொள்ளும் நாம், ஒரு சமூகத்தின்
பிரச்சினையைத் தீர்க்கப்போய் அதனால் மற்றொரு சமூகத்துக்கு பிரச்சினை ஏற்பட இடமளிக்கக் கூடாது என்ற விடயத்தையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம் என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment