Tuesday, March 29, 2022

சாய்ந்தமருது நகர சபை குறித்த அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது; மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை என்கிறார் யஹியாகான்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா திங்களன்று (28) நடத்திய ஊடக மாநாட்டில் சிறு பிள்ளைத்தனமாக கருத்துக்களை கூறியது மட்டுமன்றி சாய்ந்தமருது நகர சபை விடயத்தை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு, அலட்சிய போக்கில் கருத்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாகும்.

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவான அதாவுல்லாவால், இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது என்பது ஊர்ஜிதமாகி விட்டது. 

அவ்வாறு இருக்கும்போது கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறியிருப்பது வெறும் வெற்றுக் கதை மட்டுமன்றி பொய் பிரச்சாரமும் கூட என்பது தெளிவாகிறது.

தே.கா தலைவர் அதாவுல்லா, இனி எந்த இடத்திலும் சாய்ந்தமருது நகர சபை விடயமாக பேசத் தேவையில்லை. பேச வேண்டிய இடத்தில் பேசாமல், ஊடகங்களில் மட்டும் பேசி சாய்ந்தமருது மக்களையும் அவர்களின் நகர சபை கோரிக்கையையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது இனியும் ஏற்புடையதாக இருக்காது. அது அவரது அரசியலுக்கு ஆரோக்கியமானதுமல்ல.

எனவே, இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த முனையாமல், சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இருந்து அதாவுல்லா முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்..

அல்லது தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த சாய்ந்தமருது மக்களின் சுமார் 9000 வாக்குகளுக்காவது, அதற்கு பரிகாரமாக தனது மிகுதி இரண்டரை வருட கால எம்பி பதவியை சாய்ந்தமருதுக்கு வழங்கி நன்றி செலுத்த முன்வர வேண்டும்.

சாய்ந்தமருது மக்கள் அதாவுல்லா  மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் என்னால் உறுதியாக கூற முடியும். எமது மக்கள் தமது நகர சபை விடயத்தில் அதாவுல்லாவை இனியும் நம்பத் தயாரில்லை. அவரது பசப்பு வார்த்தைகளுக்கு அவர்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்பது திண்ணம்.

அதேபோல், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகமும் இனியும் பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முனையாது, பள்ளிவாசல் பரிபாலன வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment