Sunday, September 25, 2022

டொக்டர் ஜெமீல் அவர்களுடைய இழப்பு இன நல்லிணக்கத்தை விரும்புகின்ற மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்; சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் அனுதாபம்..!

-அஸ்லம் எஸ்.மெளலானா--

வைத்தியத்துறையில் நீண்ட சேவையை ஆற்றி பல்லின சமூகத்தினாலும் மதிக்கப்படுகின்ற டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களினுடைய இழப்பு இன நல்லிணக்கத்தை விரும்புகின்ற மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் (EASE) தெரிவித்துள்ளது.

அமைப்பின் சார்பில் அதன் செயலாளரும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.ஜி.எம்.றிசாத் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்ணியின் நீண்ட கால  ஒரு செயற்பாட்டாளராகவிருந்து அவர் ஆற்றிய  சேவைகள்  சமூகத்தால் மதிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுடைய உரிமைகளை மீட்டுக் கொடுப்பதிலும் குடும்ப வன்முறைகளிலே ஈடுபடுகின்றவர்களைக் கண்டுபிடித்து அதற்கு நிவாரணம் வழங்குவதிலும் அன்னவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

மேலும், எமது முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் தேசபந்து ஜெஸிமா இஸ்மாயிலோடு இணைந்து சுனாமிக்கும் பின்னதான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பல்லின மக்களுக்கான மீள் கட்டுமானப் பணிகளில் அவர் ஆற்றிய சேவைகளை இன்றும் மறக்க முடியாதவைகளாகவே உள்ளன.

அதேபோன்று அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்திற்கூடாக பல்லின மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மிகுந்த சேவைகளை ஆற்றியிருந்தார்.

எங்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அங்கு விரைந்து சென்று உரியவர்களை தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றிய அமைப்பின் (EASE) போசகராக இருந்து எம்மோடு இணைந்து பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றியிருந்தார்.

குறிப்பாக கொவிட் 19 காலப்பகுதியிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய ஆலோசனை வழங்குவதிலும், அதிலும் குறிப்பாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக பாடசாலைச் சமூகத்திற்கு அவர் வழங்கிய மருத்துவ ஆலோசனைகள் மிக முக்கியமானவையாகும்.

அத்தோடு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவராக இருந்து கொண்டு  சாய்ந்தமருது கிராமத்தின் அபிவிருத்திக்கு அவர் வழங்கிய சேவை மறக்க முடியாததாக இருக்கிறது.

மேலும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் ஆரம்ப வைத்தியராக இருந்து தொடர்ந்தும் சேவையாற்றியதுடன் அதன் அபிவிருத்திச் சங்க உறுப்பினராக  இருந்து மரணிக்கும் வரை அவர் ஆற்றிய சேவை என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியவைகளாகவுள்ளன.

தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய நினைவுகளை ஒரு சுயசரிதையாக தடங்களின் நினைவுகள் என்ற நூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோன்று தன்னுடைய குடும்ப வரலாற்றையும் ஒரு நூலாக வெளியிட்டது மட்டுமல்லாமல் சாய்ந்தமருது கிராமத்தின் வரலாற்றை எழுதுவதிலும் அவர் ஆற்றிய சேவைகள் என்றுமே மறக்க முடியாதவை.

அது மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் தான் ஒரு வைத்தியராக இருந்தபோதும் மக்களோடு இரண்டறக் கலந்து எந்த வேற்றுமைகளும் இல்லாது சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதில் அரும்பாடு பட்டார்.

அதுபோன்று சிரேஸ்ட பிரஜைகளுக்கான அமைப்பை நிறுவி அவ் அமைப்பி்னூடாக சமூகத்திற்கு பல சேவைகளை ஆற்றியதுடன் அவர்களின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துவதில் மர்ஹும் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் பின்நிற்கவில்லை என்றால் அது மிகையாகாது.

அந்த உத்தமனுடைய ஜனாஸா நல்லடக்கத்தின் போது பல்லின மக்களும் ஒன்றுகூடி அவருடைய  இறுதி ஊர்வலத்திலே கலந்து கொண்ட காட்சியானது அவர் எந்த அளவுக்கு இனங்களுக்கு மத்தியில் நல்லுறவைப் பேணி வந்துள்ளார் என்பதை பறைசாற்றும் விடயமாகவள்ளது.

மர்ஹும் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களா எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

மேலும் அவருடைய இளப்பினால் துயருறும் அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதல்களையும் வழங்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு EASE வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment