Sunday, June 16, 2024

சமூக, தேச நலன்களில் கரிசனை கொள்வோம்; கிழக்கு மாகாண சபை முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

பலஸ்தீன் மக்களின் மீட்சிக்காகவும் உலக முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும்
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காகவும் கரிசனையுடன் இப்புனிதத் திருநாளில் பிராத்திப்போம் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த சூழ்நிலை மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே சில வருடங்களாக எமது பெருநாட்கள் கடந்து சென்றிருந்ததை எண்ணிப் பார்க்கிறோம். இறைவன் அருளால் தற்போது அந்த அவலநிலை ஓரளவு நீங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள தருணத்தில் இப்பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்.

எவ்வாறாயினும் எமது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீட்சி பெற வேண்டும். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் அனைவரது கஷ்டங்களும் முழுமையாக நீங்கி, நிம்மதியான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும். தேச நலன் கருதிய செயற்பாடுகளுக்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே இந்த இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.

இன, மத, பிரதேச பேதங்களைக் களைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவதன் ஊடாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற யதார்த்தங்களை உணர்ந்து செயற்படுவோமாக.

மேலும், இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற பலஸ்தீன் முஸ்லிம்களின் மீட்சிக்காகவும் பலஸ்தீன் சுதந்திர நாடாக மலர்வதற்கும் நாம் இன்றைய தினத்தில் விசேடமாக பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

No comments:

Post a Comment