Thursday, September 2, 2021

சாய்ந்தமருதில் 20943 கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 20943 கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் முடிவுற்றிருப்பதால் இன்று வியாழன் (02) தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல்அமீன் றிசாட் தெரிவித்தார்.

இவற்றுள் 14037 பேருக்கு முதலாவது தடுப்பூசியும் 6906 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும். செலுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 03 நாட்களில் மாத்திரம் 7500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் நடவடிக்கை கடந்த திங்கள் (30) தொடக்கம் நேற்று புதன் (01) வரை 04 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இதனை 04 நாட்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோதிலும் கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் புதன்கிழமை நண்பகலுடன் முடிவுற்றதால் இன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாலேயே இவ்வாறு குறுகிய காலத்தினுள் தடுப்பூசிகள் முடிவுற்றுள்ளன.

எவ்வாறாயினும் இப்பிரதேசத்தில் தடுப்பூசி பெற தவறியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவில் மீண்டும் இடம்பெறும். அதற்கான கால, நேர, இடங்கள் பற்றிய விபரங்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்- என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அல்அமீன் றிசாட் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஆளணியினர் உள்ளிட்ட வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்த நேர்த்தியான ஏற்பாடுகளுடன் இப்பிரதேசத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இச்சிறப்பான ஒழுங்குபடுத்தல் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்காமல் நெரிசல், கால தாமதம் எதுவுமின்றி ஒவ்வொருவரும் சில நிமிடங்களுக்குள்ளேயே தடுப்பூசியைப் பெற்று வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment