-அஸ்லம் எஸ்.மெளலானா-
கடந்த வெள்ளப் பெருக்கின்போது கல்முனை மாநகர சபை முன்னெடுத்த அனர்த்தக் கட்டுப்பாடு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மருதமுனை அனர்த்த முகாமைத்துவக் குழு பாராட்டியுள்ளது.
மருதமுனை அனர்த்த முகாமைத்துவக் குழுவின் பிரதிநிதிகள் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. அன்ஸார் மெளலானா தலைமையில் நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து - உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களை சந்தித்து - மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களுக்கு முகவரியிடப்பட்ட பாராட்டுக் கடிதத்தை கையளித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் பிற்பகுதியில் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அனர்த்தத்தில் இருந்து மக்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக கல்முனை மாநகர சபையானது துரிதமாக செயற்பட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் இரவு பகலாக இப்பணிகளை சிறப்பாக முன்னெடுத்திருந்தமை மிகவும் போற்றத்தக்க பணியாகும் என்று பாராட்டியுள்ள மருதமுனை அனர்த்த முகாமைத்துவக் குழு - இச்சேவைக்காக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை எதிர்கால அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தில் மேலதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல்வேறு முன்மொழிவுகளை மருதமுனை அனர்த்த முகாமைத்துவக் குழுவினர் இதன்போது கல்முனை மாநகர சபையிடம் சமர்ப்பித்து அவற்றை கூடிய விரைவில் நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment