Thursday, January 23, 2025

சாய்ந்தமருது அல்ஹிலால் வரலாற்று சாதனை; 49 மாணவர்கள் புலமைச் சித்தி.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 49 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர்.

அதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய 231 மாணவர்களில் 168 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 219 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப்பெறு பேறுகளின் பிரகாரம் இப்பாடசாலை சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயத்திலும் முன்னணியில் திகழ்கிறது.

இதன் மூலம் இப்பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியிருக்கிறது.

இச்சாதனை பெறுபேற்றினை அடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் அவர்களுக்கும் பிரதி மற்றும் உதவி அதிபர்களுடன் மாணவர்களுக்கு போதித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (23) வாழ்த்தி வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளனர்.




Tuesday, January 21, 2025

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு.!


-அஸ்லம் எஸ்.மெளலானா-

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. ரி.எம். றாபி. அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்த கமல் நெத்மினி ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற ஏ.எஸ்.எம்.அஸீம், அப்பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் 2022 ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்றார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, January 18, 2025

அப்துல்லாஹ் ஹஸரத்தின் மரணம் முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும்; சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்வி, சமயம், சமூகம், சமாதானம் போன்ற பல்வேறு துறைகளில் தனது ஆளுமையைப் பதித்த புத்தளம் காசிமிய்யா அறபுக் கல்லூரி அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவருமான அஷ்ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மரணமானது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும் என்று சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக் கல்லூரி அதிபருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இனங்களுக்கிடையிலான சமாதானப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டார்.

வடக்கிலே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2007 டிசம்பரில் யாருமே யாழ்ப்பாணம் செல்லத் துணியாத காலத்தில் நாங்கள் இருவரும் அங்கு நடைபெற்ற சர்வதேச சமாதான மகாநாட்டுக்குச் சென்றிருந்தோம். ஜப்பானின் முன்னாள் வெளி விவகார அமைச்சர் யசூசி அகாசி கலந்து கொண்ட அம்மகாநாட்டில் சமாதானத்துக்கான எமது பங்களிப்புக்களை வழங்கினோம்.

அதேபோல் 2008 ஆம் ஆண்டு திருமலையில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டிலும் உலகத் தலைவர்கள் பலருடன் சேர்ந்து கலந்து கொண்டதுடன் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்;ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நானும் அப்துல்லாஹ் ஹஸரத், சுப்யான் மௌலவி, நியாஸ் மௌலவி போன்றோரும் கலந்து கொண்டிருந்தோம்.

இவ்வாறு அவரது பணிகளும் பயணங்களும் அதிகமானவை. அப்துல்லாஹ் ஹஸரத் சமாதானப் பேரவையுடன் இணைந்து பல்வேறு சமாதானப் பணிகளில் ஈடுபட்டார். பிற சமூகத்துடன் நல்லபிப்பிராயத்தை வளர்த்தார்.

எமது பிரதேசத்தில் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய அழிவின்போது பல்வேறு உதவிகளில் ஈடுபட்டார்.

மதீனாப் பல்கலைக்கழகத்தில் நாம் ஒன்றாகப் பயின்றோம். உலமா சபையின் பணிகளில் ஒன்றிணைந்து செயலாற்றினோம். அறபுக் கல்லூரிகளில் அதிபர் பதவிகள் வகித்தோம்.

கடந்த மாதம் அவரது வீடு வருவதாக நான் கூறியபோது இது போன்ற மகிழ்ச்சிகரமான செய்தி எனக்கில்லை என்று அவர் கூறியது அவரின் விருந்தோம்பலின் சிறப்பை எடுத்துக்காட்டியது. அவர் வீட்டில் நாம் உணவருந்தியபோது அவருக்கு இயலாத நிலையிலும் பக்கத்தில் வந்து நின்றார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தோடு எமது தைபா அறபுக் கல்லூரிக்கு வந்துபோனார்.

நாட்டு நடப்புக்களை வாராந்தம் என்னோடு கலந்துரையாடும் நல்ல நண்பரை இழந்து விட்டேன். பணிவும் பண்பும் நிறைந்த அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் பிரிவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அதுவே நடந்தேறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றங் குறைகளை மன்னித்து உயரிய சுவனத்தில் அவரைக் குடியிருக்கச் செய்வானாக!

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் பொறுமையையும் அளிப்பானாக!

Wednesday, January 8, 2025

அக்கரைப்பற்று மாநகர சபை களப்பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்பூட்டல்.!

நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களை தெளிவூட்டுவதற்காக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை (08) அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் தலைமையில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெற்றது.

இதன்போது எலிக்காய்ச்சல் பரவும் வழிமுறைகள் மற்றும் அதற்கான சூழல்கள் பற்றியும் எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் விபரிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மாத்திரையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். முனவ்வர்,  அக்கரைப்பற்று மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி சமீனா ஹம்தூன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். பெளமி, வேலைகள் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.சலீத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேறறிருந்தனர்.





Saturday, January 4, 2025

தென்கிழக்கு பல்கலைக்கு நிரந்தர உபவேந்தர் நியமனம் எப்போது.?

-முகம்மட் முக்தார்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கான புதிய உப-வேந்தர் இதுவரை நியமிக்கப்படாதுள்ளதாக இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவையின் தவிசாளர்
எம்.எம்.எல் அகமட் ஜனாதிபதி அனுரகுமாரவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றியவரின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த போதிலும் அக்காலப்பகுதி ஜனாதிபதி தேர்தல் காலமாக இருந்தமை காரணமாக உபவேந்தர் நியமனம் இடம்பெறவில்லை.

இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பதில் உப வேந்தராக அப்பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமனம் செய்யப்பட்டார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என யாவும் நடைபெற்று முடிந்து விட்டமையால் நிரந்தர உப- வேந்தரை இப்பல்கலைக் கழகத்திற்கு நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியிடமுள்ளது.

பல்கலைக்கழக கவுன்சினால் பல்கலைக்கழக உப-வேந்தராக நியமிக்கப்பட வேண்டிய மூவரது பெயர்களை பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு கடந்த வருடம் ஜுன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்களில் தகுதியுள்ள ஒருவரது பெயர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு என்பவற்றால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்நியமனம் தொடர்பாக அக்கறை காட்டவில்லை.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நிரந்தர உப-வேந்தர் நியமனம்
இடம்பெற வேண்டியது அத்தியாவசியமானது என தென்கிழக்கு கல்விப் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.