Sunday, March 26, 2023

தக்வாவுடன் ஆன்மீக, சமூகப் பணியாற்றிய காஸிம் மெளலவி அவர்களின் மறைவு பேரிழப்பாகும்; கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அனுதாபம்..!

-அஸ்லம் எஸ்.மெளலானா-

எவருக்கும் அஞ்சாமல் இறைவனது பொருத்தத்தை மட்டும் நாடி, தக்வாவுடன் ஆன்மீக, சமூகப் பணியாற்றிய யூ.எல்.எம்.காஸிம் மெளலவி அவர்களின் மறைவு எமது சாய்ந்தமருது,  மாளிகைக்காடு பிரதேசங்களுக்கு பேரிழப்பாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளுக்கான பொறுப்பாளரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

எமது சாய்ந்தமருது பிரதேசத்தின் மிக முக்கிய முதுசங்களில் ஒன்றாகத் திகழ்ந்த காஸிம் மெளலவி இந்த மண்ணுக்கு விடைகொடுத்துச் சென்றாலும் அவரது சேவைகளை இந்த மண் என்றும் நினைவு கூறிக்கொண்டே இருக்கும்.

அரச பாடசாலையில் ஓர் ஆசிரியராகவும் தனது வீட்டை அல்குர்ஆனை போதிக்கின்ற ஒரு தளமாக செயற்படுத்திய முஅல்லிமாகவும் ஓர் அறபுக் கலாபீடத்தின் அதிபராகவும் நிர்வாகத் தலைவராகவும் இருந்து ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு சன்மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கின்ற பெரும் பாக்கியத்தை அவர் பெற்றிருந்தார்.

எமது சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராக இருந்து ஊரின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்துள்ளார்.

அத்துடன் நீண்ட காலம் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராக இருந்து வறிய மக்களின் துயர் துடைப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

பள்ளிவாசல் நிர்வாகத்திலும் ஸகாத் நிதியத்திலும் அறபுக் கலாபீடத்திலும் ஜம்மியத்துல் உலமா சபையிலும் வேறு எந்த பொது விடயத்திலும் சரியை சரியென்றும் பிழையை பிழைதானென்றும் தைரியமாக சுட்டிக்காடி, உண்மைகளையும் நியாயங்களையும் யதார்த்தங்களையும் எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசுகின்ற துணிச்சலை அவரிடம் காண முடிந்தது.

இவ்வாறு சத்திய வழிநின்று பேசும்போதும் செயற்படும்போதும் தனிப்பபட்ட முறையில் தன்மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல் இறைதிருப்தியை மாத்திரம் எதிர்பார்க்கின்ற ஓர் ஆலிமாகவும் நிர்வாகியாகவும் தன்னை நிலைநிறுத்தியிருந்தார்.

ஊர் நலன் சார் விடயங்களுக்காக என்றும் முன்னிற்கின்ற காஸிம் மெளலவி அவர்கள், எனது அரசியல் பயணத்திலும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கி, பல்வேறு வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் இபாதத்துகளையும் சேவைகளையும் பொருந்திக் கொண்டு, மேலான சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.

Saturday, March 25, 2023

சேவையின் சிகரம் சாய்ந்தமருதின் மூத்த உலமா காஸிம் மெளலவி வபாத்; பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் ஜனாஸா நல்லடக்கம்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார்.

ஓய்வுபெற்ற பிரதி அதிபரான காஸிம் மௌலவி அவர்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவராகவும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவராகவும் நீண்ட காலம் பதவி வகித்து, பிரதேசத்தின் சமூக, கல்வி, கலாசார முன்னேற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடம் என்பவற்றின் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும் தலைவராகவும் இருந்து அவற்றின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறார்.

தஃவா இஸ்லாமிய அறபுக் கலாபீடத்தின் ஊடாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை உள்வாங்கி, அவர்களை ஹாபிழ்களாக உருவாக்குவதற்காக காசிம் மௌலவி அவர்கள் தியாக மனப்பாங்குடன் முன்னின்று உழைத்துள்ளார்.

அவ்வாறே பைத்துஸ் ஸகாத் நிதியத்திற்கு நீண்ட காலமாக தலைமைத்துவம் வழங்கிய காசிம் மௌலவி அவர்கள், எவ்வித தனிப்பட்ட செல்வாக்குகளுக்கும் இடமளிக்காமல் அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸக்காத் வழங்குவதற்குத் தகுதியானவர்களை இனங்கண்டு, அவர்களின் வறுமையை துடைப்பதற்குரிய ஸக்காத் பங்கீட்டு முறைமையை மிகவும் நேர்மையாக நடைமுறைப்படுத்தியிருந்தார். 

இவ்வாறு சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வந்த ஊரின் முதுசங்களில் ஒன்றான ஹஸ்ரத் காசிம் மௌலவி அவர்கள் காலமான செய்தி மிகுந்த கவலையையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

அன்னாரது ஜனாஸா சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்பினர், இளைஞர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.

காஸிம் மெளலவியின் மறைவுக்கு சாய்ந்தமருது ஷூரா சபை, மறுமலர்ச்சி மன்றம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்டோரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருப்பதுடன் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை என்பன அனுதாபம் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளன.

குடும்ப உறவாகத் திகழ்ந்த காஸிம் மெளலவியின் மறைவு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது; ரஹ்மத் மன்சூர் ஆழ்ந்த அனுதாபம்..!


-அஸ்லம் எஸ். மெளலானா-

எனது தந்தையாரின் அரசியல் காலம் தொட்டு இன்று வரை எமது குடும்ப உறவாகத் திகழ்ந்த எனது நேசத்திற்கும் மதிப்புக்குமுரிய மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பிரதித் தலைவரும் பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

எனது தந்தையார்- முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் அரசியல் பயணத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவரது வெற்றிக்கு என்றும் உறுதுணையாக இருந்து செயற்பட்ட காஸிம் மெளலவி அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தையின் மறைவுக்குப் பின்னரும் காஸிம் மௌலவி அவர்கள் என்னுடனும் குடும்பத்தினருடனும் உறவுகளைப் பேணி வந்தார். தேவையான சந்தர்ப்பங்களில் எனக்கு உரிமையுடன் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி, நெறிப்படுத்தியிருந்தார்.

நானும் எனது தந்தைக்கு நிகராக அவர்களை நேசித்து, மதித்து, அன்பு பாராட்டி வந்துள்ளேன். அதன் ஊடாக அவர்களது பிள்ளைகளுடனும் நட்புறவைப் பேணி வருகின்றேன்.

அன்னார் இப்பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகள் அளப்பரியதாகும். அவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

வல்ல இறைவன் அன்னாரது சேவைகள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கவும் பிரார்த்திக்கிறேன்.

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை வலுப்பெறுவதற்கு பெரும் பங்காற்றியவர் காஸிம் மௌலவி; சாய்ந்தமருது ஷூரா சபை தெரிவிப்பு..!


-கல்முனை செய்தியாளர்-

05 தசாப்தங்களுக்கு மேலாக சாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்து வந்த சன்மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறார் என்று சாய்ந்தமருது ஷூரா சபை தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பிரதித் தலைவரும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் முன்னாள் தலைவருமான யூ.எல்.எம்.காஸிம் மௌலவியின் மறைவு குறித்து ஷூரா சபை சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

ஒரு சன்மார்க்க அறிஞர் என்ற ரீதியில் தனது கடமைகளை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றிய திருப்தியுடனேயே அன்னார் இறையடி சேர்ந்திருக்கிறார். எந்தவொரு பணியைச் செய்கின்றபோதிலும் எவ்வித குறையும் தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் திடமாக இருந்து மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

பாடசாலையில் ஓர் ஆசிரியராக, பிரதி அதிபராக, பள்ளிவாசல் இமாமாக, ஊரை நிர்வகிக்கின்ற பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவராக, பதில் தலைவராக, ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளராக, தலைவராக, அரபுக் கல்லூரியின் அதிபராக, நிர்வாகத் தலைவராக, பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் தலைவராக, இணக்க சபை அங்கத்தவராக என்று பல பொறுப்புகளை சுமந்திருந்த ஹஸ்ரத் காஸிம் மௌலவி அவர்கள், அவற்றை அமானிதமாகக் கருதி, மிகவும் பக்குவத்துடன் மிகுந்த இறையச்சத்துடன் தனக்குரிய கடமைகளை நிறைவேற்றி வந்தமை அவரிடம் காணப்பட்ட சிறப்பம்சமாகும்.

1985 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யுத்தம், இனக்கலவரங்கள் தலைதூக்கியிருந்த சந்தர்ப்பங்களில் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக உயிரைத் துச்சமாக மதித்து, இனங்களிடையே நட்புறவை ஏற்படுத்துவதிலும் சமாதான செயற்பாடுகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை என்றும் நினைவுகூரத்தக்க விடயமாகும்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் ஊடாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் அவர் ஆணிவேராக இருந்து செய்யப்பட்டார்.  

2006ஆம் ஆண்டு முதல் சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் முன்னெடுத்திருந்த போராட்டங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகமோ ஊர்ப் பெரியார்களோ ஆதரவளிக்க முன்வராத சூழ்நிலையில் ஹஸ்ரத் காஸிம் மௌலவி அவர்கள், தைரியமாக முன்வந்து, பக்கபலமாக செயற்பட்டதை மறக்க முடியாது.

இப்போராட்டத்தை பள்ளிவாசல் நிர்வாகமே முன்னின்று முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டபோது அவர் நிர்வாகத்தினுள் நியாயங்களை எடுத்துச் சொல்லி, அழுத்தம் கொடுத்ததன் பயனகாவே இப்போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்க 2015ஆம் ஆண்டு பள்ளிவாசல் நிர்வாகம் முன்வந்ததும் அது வரலாற்றுத் திருப்பமாக அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தின் முதுசமாகத் திகழ்ந்த ஹஸ்ரத் காஸிம் மௌலவியின் திடீர் மறைவு இப்பிரதேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது- என்று ஷூரா சபை தெரிவித்துள்ளது.