Monday, January 18, 2021

கல்முனை வலய கல்விப் பணிமனை பொறியியலாளராக ஏ.எம்.சாஹிர் கடமையேற்பு..!


அஸ்லம் எஸ்.மௌலானா

வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் கல்முனை வலயக் கல்வி பணிமனைக்கான மாவட்டப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட ஏ.எம்.சாஹிர் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை கட்டிடங்கள் திணைக்களத்தின் மாவட்டப் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் கல்முனை வலய கல்விப் பணிமனைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்.

பொறியியல் சேவையில் சுமார் 16 வருட கால அனுபவத்தைக் கொண்ட முதலாம் தர, பட்டயப் பொறியியலாளரான இவர் கல்முனை மாநகர சபையின் பதில் பொறியியலாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இதற்கு முன்னதாக நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் கல்முனை மாநகர சபைக்கான திட்டப் பொறியியலாளராகவும் வேறு சில நிறுவனங்களிலும் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார்.

றுகுணு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணத்துறை சார்ந்த சட்டத்துறையில் முதுமானிப் பட்டத்தையும்

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழத்தில் பொது நிர்வாகத்துறைசார் பட்டத்தையும், நிர்மாண முகாமைத்துவத்தில் எம்.பி.ஏ. பட்டத்தையும் வேறு சில பொறியியல் தொழில்சார் தகைமைகளையும் பெற்றுள்ளார்.

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் பொருளாளரான மர்ஹூம் கே.எம்.பி.ஆதம்பாவா மற்றும் ஆஷியா உம்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

www.metromirror.lk

metromirrorweb@gmail.com

No comments:

Post a Comment