செயிட் ஆஷிப்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) கீழ் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் (EFC) ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குவதற்கான வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களது வழிகாட்டலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்படி சம்மேளனத்தின் விசேட பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வள நிலைய முகாமையாளர் தேசபந்து மெனிக் குணரட்ன அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.
இதில் மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.அப்துர் ரஹீம், உள்ளூராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌசாத் ஆகியோரும் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அவர்களது கருத்துக்கள் கேட்டறியப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விபரிக்கப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர சபையுடன் தொடர்புடைய சேவைகளை மாற்றுத்திறனாளிகள் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன. குறிப்பாக வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இலகு வழியில் வாய்ப்பளித்தல், நூலக சேவை, வீதி புனரமைப்பு, தெரு விளக்கு பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையளித்தல் என பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது வழிகாட்டல் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
எதிர்காலங்களில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
No comments:
Post a Comment