Saturday, January 1, 2022

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுப் பாலமாகத் திகழும் கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 200 ஆவது கொடியேற்ற விழா..!

-அப்துல் ஜப்பார் சமீம்  ஜே.பி-

தேசிய ரீதியில் புகழ்பூத்த கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 200 ஆவது கொடியேற்ற விழா 2022.01.04 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

இயற்கை அன்னையின் ஆர்ப்பரிப்போடு மிளிரும் கிழக்கு மாகாணத்தின் தென்முனையில் பரந்து விரிந்து கிடக்கும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் முகவெற்றிலையாக திகழ்வது கல்முனை எனும் மாநகரமாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு நகரத்திற்கும் வரலாறுகளும் பாரம்பரியங்களும் உள்ளன. இதைவிட அப்பிரதேசங்களில் ஏதாவது ஒரு பிரதான வரலாற்றுச் சின்னம் காணப்படும்.

இவ்வாறுதான் கல்முனை மாநகரதிற்க்கும் அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களுக்கும் சிறப்புகளும் மிக நீண்ட சுவாரசியமான வரலாறுகளும் நிறைந்து கிடக்கின்றன. இவ்வாறு கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் கல்முனை மாநகர சபை மக்கள் பெற்ற ஒரு மாபெரும் வரலாற்று சின்னமாகும்.

கல்முனை நகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதால் இதனை எல்லோரும் கடற்கரை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். இப்பள்ளிவாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்பு சேர்ப்பதுதான் இப்பள்ளிவாசலில் வருடாவருடம் நடாத்தப்படும் கொடியேற்றி விழாவாகும்.

வருடாவருடம் ஜமாதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழாவானது சங்கைமிகு சாஹுல் ஹமீது ஒலியுள்ளாவின் வருடாந்த நினைவு வைபவமாகும். 

வழமைபோல் இவ்வருடமும் எதிர்வரும் 04ம் திகதி செவ்வாய் கிழமையுடன் இப்பள்ளிவாசலின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழா ஆரம்பமாகின்றது.

இன் நானிலத்தில் இருளகற்றி ஒளியூட்ட வந்த நபி பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் 23 ஆவது தலைமுறையில் செய்யது ஹசன் குத்தூஸ் செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபியுல் அவ்வல் மாதம் வெள்ளிக்கிழமை தென் இந்தியாவின் மாணிக்கப்பூர் எனும் ஊரில் பிறந்தவர்கள்தான் சங்கைமிகு சாஹுல் ஹமீத் வலியுல்லாஹ் அவர்கள். 

இஸ்லாத்தின் ஞான விளக்கத்தை பரந்த உலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று இருள் அகற்றி ஒளி பெறச் செய்த பெருமை பல மகான்களை சாரும். தன்னலம் மறந்து மக்களுக்கு அறிவூட்டி தொண்டு செய்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஊண் தீன் அற்று உற்றார்  உறவினரை வெறுத்து இறைவனது வழிநடந்து எல்லா உலகத்தையும் இன்ப வாழ்க்கையில் ஆழ்த்த நினைத்து இறைதொண்டாற்றிய ஒரு பெரும் மகானே சங்கைமிகு சாகுல் ஹமீத் வலியுல்லாஹ் அவர்கள்.

அப்பெரு மகானின் நினைவுச் சின்னம் அவர்கள் இறந்து பல ஆண்டுகள் சென்ற பின்னரும் அவர் செய்த இறைத் தொண்டின் பலனாக பூத்துக் காய்த்து கனிந்து வருகின்றது. அவர்களின் வாழ்க்கையும் வரலாறும் உலக மக்களுக்கு மிக உன்னதமான படிப்பினையும் முன்மாதிரியுமாகும்.

வேண்டிரை வீசும் வீயன் நாகூர் அண்ணல் சாஹின் சாஹே சாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பெரியது. மாணிக்கபபபூரில் பிறந்து கொஞ்சும் அரபுமொழி வல்லுனராகி தந்தை தாயை துறந்து ஞான வழி நடக்கவிழைந்து ஆண்டவனின் பாதையில் இறங்கி பிறந்தகம் விட்டு வெளியேறிச் சென்று பெரும் அற்புதங்கள் செய்த பெருமானாரின் சரிதையை நினைக்க நினைக்க உள்ளம் உருகுகின்றது.

தனது எட்டாவது வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தார். அதன் பின்பு தனது இளம் வயதிலேயே இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். இவர்களின் ஆத்மீக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது இலங்கை நாட்டிற்கு வந்து தப்தர் ஜெய்லானி எனும் இடத்தை அடைந்தார். இலங்கையின் தென்பகுதி கரையை அடைந்த அவர்கள் புனித ஸ்தலங்களில் ஒன்றாகிய நபி ஆதம் (அலை) அவர்களின் பாதம் பட்ட இடத்தினையும் தரிசித்துவிட்டு தொடர்ந்தும் கரையோர பகுதியாகிய தென்கிழக்கு நோக்கி வந்தார். 

அந்த சமயத்தில் கல்முனைக்குடியில் வசித்தவர்கள்தான் மர்ஹும் முஹம்மது தம்பிலெப்பை அவர்கள். இவர்கள் மார்க்கத்திலும் கல்வி ஞானத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். உயர் பண்புடன் ஒழுக்கச் சீலராக வாழ்ந்து வந்த இவர் இக்காலப்பகுதியில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

கடும் நோயினால் அவஸ்தைப்பட்ட இவர்கள் கடலில் நீராடவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் கல்முனைக்குடி கடற்கரை ஓரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக் கடமையை செய்துவரத் தவறவில்லை.

கால ஓட்டத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின் அயர்ந்து தூங்கிவிட்ட முஹம்மது தம்பிலெப்பை அவர்களின் கனவில் ஒரு வாட்டசாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிற தலைப்பாகையுடன் தோன்றி உமது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கிறேன் நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்குமிடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மைப் பீடித்துள்ள நோயும் அகன்றுவிடும். என் பெயர் ஷாகுல் ஹமீத் என்று கூறி மறைந்து விட்டார்கள்.

கண்விழித்துப் பார்த்தபோது பொழுது புலர்ந்திருந்தது. அவர்களின் உடலில் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனே இறைவனைப் புகழ்ந்தவர்களாக குறிப்பிட்ட மண் குவியலைத்தேடி கண்ணுற்று அருகில் இருந்த மரங்களை தறித்து கம்புகளைக் கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைத்தார்கள்.

இச்சம்பவங்களை அன்றைய ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களிடம் கூறினார்கள். பொதுமக்களும் அவ்விடம் வந்து அடையாள பொருட்களை கண்ணுற்றதோடு அவர்களின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றையெல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலை செப்பனிட்டு தர்காவாக மாற்றினர். சாஹுல் ஹமத்து ஒலியுல்லாஹ் பெயரில் மௌலூது ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவர்களின் பெயரில் அன்னதானமும் வழங்கினர்.

தொடர்ந்து மக்கள் இத்தர்காவில் கூடத் தொடங்கினர். சங்கைமிகு சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் கூடத்தொடங்கினர். இதனால் சங்கைமிகு சாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் வபாத்தான ஜமாதுல் ஆகிர் மாதம் தலைப்பிறையுடன் இத்தர்காவில் தொடர்ந்து 12 நாட்கள் அவர்களின் பெயரில் மௌலூது ஓதப்பட்டு பன்னிரெண்டாம் நாள் மாபெரும் கந்தூரி அன்னதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இதுவே கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசலினதும் அதன் கொடியேற்ற பெருவிழாவினதும் வரலாறாகும். 

இக்கொடியேற்றக் காலப்பகுதியில் தர்காவில் தொடர்ந்து 12 நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மௌலூது மஜ்லிஸ் பக்கீர் ஜமாஅத்தினரின் ராத்திபு மஜ்லீஸ் என்பன சிறப்பாக நடைபெறும்.

இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி செவ்வாய் கிழமை கொடியேற்றப்பட்டு  எதிர்வரும் 16ம் திகதி அன்று மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ்விழா இனிதே நிறைவுபெறும்.

இப்பள்ளிவாசலில் ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறிய மினரா ஒன்றும் கம்பீரமாக காட்சி தருகின்றன. அத்துடன் முற்றாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத்தர்காவில் மேலும் மூன்று சிறிய மினராக்களும் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன. இவற்றிலேயேதான் வருடாவருடம் கொடியேற்றப்படுகிறது.

இவ்விழாவானது கிழக்கிலங்கை இந்து முஸ்லிம் மக்களினால் இன பேதமற்ற முறையில் கொண்டாடப்படுவதால் இரு சமூகங்களின் உறவு பாலமாக இத்தர்ஹா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடி கடற்கரை எல்லையிலிருந்து 20 மீற்றர் எல்லையில் இருக்கும் இரு பெரிய சிறிய மீனராக்களும் கடல் எல்லையிலிருந்து 40 மீற்றர் எல்லையிலிருக்கும் அழகிய தர்காவும் சென்ற 2004-12-26 இல் ஏற்பட்ட கடல்கோள் பேரலைகளினால் தாக்கப்பட்ட போதிலும் இத்தர்காவும் மினராக்களும் எவ்வித சிறு சேதங்களுமில்லாமல் கம்பீரமாக இன்றும் காட்சி தருவது பேராச்சரியமாகும்.

மேலும் இத்தர்ஹாவின் கொடியேற்ற நிகழ்வின் முக்கியத்துவம் கருதி கல்முனை பிரதேச செயலாளர் இம்முறை இதனை விசேட வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளமை வியக்கத்தக்கதாகும்.

இன்ஷா அல்லாஹ் வழமைபோல் இம்முறையும் கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா கொடியேற்ற விழா வெற்றிகரமாக முடிவடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

No comments:

Post a Comment