Tuesday, August 16, 2022

ஒலுவில் துறைமுகத்தை இழுத்து மூடுவதே கடலரிப்பைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு; ஜனாதிபதிக்கு கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை அவசர மகஜர்..!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனைப் பிராந்தியத்தில் பாரியளவில் கடலரிப்பு ஏற்படுவதற்கும் கடற்றொழில் பாதிப்படைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்ற ஒலுவில் துறைமுகத்தை, இழுத்து மூடுவதே கடலரிப்பை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே தீர்வாக அமையும் என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

இதனை வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோருக்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், நாட்டினதும் பிராந்தியத்தினதும் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒலுவில் துறைமுக நிர்மாணத் திட்டத்தை முன்மொழிந்திருந்தாலும், குறித்த கடற்பரப்பு துறைமுக அமைப்புக்கு பொருத்தமற்றது எனவும் இதனால் மீனவர் சமூகத்தினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது எனவும் நிபுணத்துவ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், அவை எதுவும் கருத்தில் கொள்ளப்படாமலேயே  துறைமுக நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக ஒலுவில் கிராமத்தில் நூற்றுக்கணக்கானோரின் குடியிருப்புக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னரே இவற்றுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்ட போதிலும் காணிகளை இழந்தோர் எதிர்பார்த்த பெறுமதி, வழங்கப்படாமல், ஏமாற்றப்பட்டிருந்தனர். இதற்காக அவர்கள் பல வருடங்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

இத்துறைமுக நிர்மாணத்தினால் நாட்டுக்கோ பிராந்தியத்திற்கோ சமூகத்திற்கோ இதுவரை எவ்வித பயனும் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் இழப்புகளையே சந்திக்க நேரிட்டுள்ளது.

இதற்காக கரையோரக் கிராமங்கள் பல காவு கொடுக்கப்பட்டிருக்கிறன. மக்கள் தமது காணிகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதுடன் முழுக் கல்முனைப் பிராந்தியத்தினதும் கரையோரப் பகுதிகள் பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.

காலத்திற்கு காலம் பதவிக்கு வருகின்ற அரசுகளும் துறைமுக அமைச்சர்களும் பிராந்திய அரசியல் தலைமைகளும் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அறிக்கைகள் வெளியிடுவதிலும் , கள விஜயங்கள் மேற்கொள்வதிலும் காலத்தை கடத்தி வருகின்றன.

எனினும் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைப்பதாக இல்லை. நாளுக்கு நாள் கடலரிப்பு உக்கிரமடைந்து வருகிறது.

இதனை வர்த்தக துறைமுகமாக இயக்க முடியாது எனத் தெரிவித்து, மீன்பிடித் துறைமுகமாக செயற்படுத்துவதற்கு கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டு, கடற்றொழில் அமைச்சின் கீழ் இத்துறைமுகம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இங்கு விஜயம் செய்து, இத்துறைமுகத்திற்கு அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடித் துறைமுகம் என்று பெயர் சூட்டி விட்டுச் சென்றுள்ளார்.

இத்துறைமுகத்திற்கு மறைந்த தலைவரான அஷ்ரபின் பெயரை சூட்டி விட்டால் பிரச்சினைகள் எல்லாம் தாமாக தீர்ந்து விடுமா? இது மக்களை ஆசுவாசப்படுத்தி, திசைதிருப்பும் சூழ்ச்சியாகவே நோக்கப்படுகிறது. இவ்வாறான மாயைகளை விடுத்து, மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கி தூரநோக்குடன், ஆக்கபூர்வமாக சிந்தித்து, செயற்பட அரசாங்கமும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் அவசரமாக முன்வர வேண்டும்.

வர்த்தக துறைமுகமாயினும் சரி, மீன்பிடித் துறைமுகமாயினும் சரி, இதன் அமைவிடம் துறைமுகத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், மக்களை இன்னுமின்னும் ஏமாற்றாமல் இதனை இழுத்து மூடுவது ஒன்றே தீர்வாக அமையும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.

இதன் மூலம் கடலரிப்பில் இருந்து இப்பிரதேசங்களை காப்பாற்றுவதுடன் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடற்றொழிலை மீளக்கட்டியெழுப்புவதற்குமான சாதக சூழல் ஏற்படும் என்பதை குறித்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்- என்றார். 

No comments:

Post a Comment