Monday, August 8, 2022

சாய்ந்தமருதில் உக்கிரமடையும் கடலரிப்பை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் மீண்டும் உக்கிரமடைந்து வருகின்ற கடலரிப்பு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கடலரிப்பு காரணமாக இப்பிரதேசங்களில் இயற்கை மற்றும் கடற்றொழில் வளங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலாளர்களின் வாடிகள் கடல் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மீனவர் சமூக பல்தேவைக் கட்டிடங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன. இதனால் வலைகள் மற்றும் மீன்படி உபகரணங்களை பாதுப்பாக வைத்துக் கொள்வதற்கும் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

படகுகள், தோணிகள் தரித்து வைக்கப்படுகின்ற கரையோரப் பரப்புகள் கூட கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டிருப்பதால் அவற்றை நிறுத்தி வைப்பதில் பாரிய சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இந்த நிலைமையினால் இப்பகுதியில் கடற்றொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடலரிப்பினால் பல தென்னை மரங்களும் கடலுக்கு இரையாகி வருகின்றன. மக்கள் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகின்ற கடற்கரை வளாக இடப்பரப்புகள் குறுகி வருவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக வீதிகள் சிலவும் சேதமடைந்து வருகின்றன. சாய்ந்தமருது சிறுவர் பூங்கா மற்றும் மீனவர் நூலகம், மாளிகைக்காடு மையவாடி போன்றவையும் பொதுக் கட்டிடங்களும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கடலரிப்பு காரணமாக மாளிகைக்காடு மையவாடியின் சுற்றுமதில் இடிந்து வீழ்ந்து, அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸாக்களின் உடற்பாகங்களும் வெளிவருகின்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து சுமார் 14 மில்லியன் ரூபா செலவில் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment